Monday, February 27, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" முதல் பாகத்திலிருந்து


  1. பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்று கொண்டேன்.

  2. ஆசைகளை துறக்காமல், ஆசைகுரிய பொருள்களை துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும், அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே. - நிஷ்குலாந்தர்

  3. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன.

  4. சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளலாகாது.

  5. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு.

  6. மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன.

  7. அன்புக்கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை.

  8. மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தபடுவதாகும்.

  9. சமயம் என்பதை, அதன் விரிவான கருத்தில்-தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே-நான் உபயோகிக்கிறேன்.

  10. ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும்.

  11. சுயநலம் ஒருவனை குருடனாக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவன் தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்ற பார்க்கிறான்.

  12. சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி.

  13. தனக்கு ஆன்மிக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம்பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார்? சமய ஞானம் வேறு; சாதனை வேறு. ஆகவே, சாதனை இல்லாத சமய ஞானம், சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.

  14. இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்கள் அவை.

  15. உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப்புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை.

  16. நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள். மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை. அவருடைய உள்ளதைப்பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். - நாராயண ஹேமசந்திரர்

  17. பொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜீவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும்.

No comments:

Post a Comment